கேரள தலைமைச் செயலக தீவிபத்திற்கு காரணம் மின்கசிவு அல்ல!- தடயவியல் துறை அறிக்கை

கேரள தலைமைச் செயலக தீவிபத்திற்கு காரணம் மின்கசிவு அல்ல!- தடயவியல் துறை அறிக்கை
கேரள தலைமைச் செயலக தீவிபத்திற்கு காரணம் மின்கசிவு அல்ல!- தடயவியல் துறை அறிக்கை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமைச் செயலகத்தில் அரசு நெறிமுறைகளை வழிகாட்டும் “புரோட்டாக்கால்” அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அலுவலக மின் விசிறியில் ஏற்பட்ட மின் கசிவால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என அரசின் தலைமைச் செயலர் விஸ்வா மேத்தா தலைமையிலான விசாரணைக்குழுவினர் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். அதை பொய்யாக்கும் விதமாக, தலைமைச் செயலக தீ விபத்திற்குக் காரணம் மின்கசிவு அல்ல என தடயவியல் துறை திருவனந்தபுரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் இயங்கும் அரசு நெறிமுறைகளை வழிகாட்டும் “புரோட்டாக்கால்” அலுவலகத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அலுவலகத்தில் உள்ள சிறிய தீயணைப்பு கருவிகளைக் கொண்டு சில நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது. இருந்தாலும் அலுவலகத்தில் இருந்த சில கோப்புகள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. கேரள அரசு இது குறித்து அரசு தலைமைச் செயலர் விஸ்வா மேத்தா தலைமையில் ஆய்வுக் குழுவை அமைத்தது. இந்த குழுவினர் தீ விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டதில், இந்த தீ விபத்து அலுவலகத்தில் இருந்த பழங்கால மின்விசிறியில் ஏற்பட்ட மின்கசிவால் ஏற்பட்டது எனவும், அந்த மின்கசிவால் வயர்கள் உருகி, நேராக கீழே இருந்த ஜன்னல் திரைத்துணிகளில் விழுந்து அறைக்குள் தீ பரவியதாக தெரியவந்தது.

இது குறித்த அறிக்கை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தீவிபத்து நடந்த “புரோட்டாக்கால்” அலுவலகத்தில் எரிந்துபோனதாக கூறப்படும் ஆவணங்கள் கேரளத் தங்க கடத்தல் வழக்கு தொடர்பானவை எனவும், ஐக்கிய அமீரக தூதரகத்திற்கு வரும் பார்சல்களுக்கு இந்த  அலுவலகம் மூலம்தான் ‘க்ளீயரன்ஸ்” சான்று வழங்கப்படும் எனவும், அது குறித்த ஆவணங்கள் வேண்டுமென்றே எரிக்கப்பட்டுள்ளன எனவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்து தொடர் போராட்டம் நடத்திவந்தன.

இந்த தீ விபத்து குறித்து கேரள தடயவியல் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர். தடயவியல் அறிக்கை வந்தபின்புதான் தீ விபத்திற்கான  காரணம் தெரியவரும் என காத்திருந்த நிலையில், கேரள அரசின் தலைமைச் செயலக தீவிபத்திற்கு மின்கசிவு காரணமல்ல என்று தடயவியல் துறை சார்பில், அதன் ஆய்வறிக்கை திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள அரசின் தலைமைச் செயலர் தலைமையிலான ஆய்வுக்குழுவினரின் அறிக்கை பொய்யாகியுள்ளது. 

ஏற்கெனவே தங்கக் கடத்தல் தொடர்பான ஆவணங்களை அழிப்பதற்கான கேரள அரசின் முயற்சிதான் இந்த தலைமைச் செயலக தீவிபத்து என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவந்த நிலையில், தடயவியல் துறையின் ஆய்வறிக்கை கேரள அரசியலில் சர்ச்சைக்குரியதாகவும், விவாத பொருளாகவும் மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com