துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. அந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்துள்ளது. அதில் 191 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. அதில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் அடங்குவார்கள். விமானத்தின் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக விமானம் இரண்டாக உடைந்து விபத்து நேரிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக மலப்புரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். 123 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் கேரளாவில் விமான விபத்தில் சிக்கிய விமானி 30 ஆண்டுகால அனுபவமிக்கவர் எனக் கூறப்படுகிறது.
கேரள விமான விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விமானம் முதலில் தரையிறங்கும் நேரத்தில் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டு தரையிறங்க முடியாத நிலை நீடித்துள்ளது. இதனால் விமானம் சிறிது நேரம் பறந்தபடியே இருந்துள்ளது. இதையடுத்து மீண்டும் 2வது முறை விமானம் தரையிறங்க முற்பட்டுள்ளது. அப்போதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது” எனத் தகவல் வெளியாகியுள்ளது.