
கேரள மாநிலம் கரவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பனீஷ்குமார் - ரஜனி தம்பதியர். இவர்களது மகன் சாரங்க். 10 வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்தார். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி தனது தாயாருடன் ஆட்டோவில் பயணித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சாரங்க், தனியார் மருத்துவமனையிலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்புக்குப் பின்பு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர் ஏ பிளஸ் கிரேடு வாங்கியுள்ளது தெரியவந்தது. அவர் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தேர்வு முடிவு வெளியாகி எதிர்பார்த்த அளவைவிட அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியானதை மகிழ்ச்சியோடு கொண்டாட பையன் இல்லை என்ற வேதனையில், அவரது பெற்றோர், உடன் பயின்ற மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் வேதனையில் உள்ளனர்.
இதையடுத்து இந்த மீளா துயரிலும் மாணவனின் உடலில் 12 பாகங்களை 12 பேருக்கு பொருத்துவதற்கு பெற்றோர் முன் வந்த நிலையில், மாணவனின் உடல் பாகங்கள் துரிதமாக அகற்றப்பட்டு 12 நபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இவரது மரணத்தை அறிந்த கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சாலை விபத்தில் உயிரிழந்த மகன் உடலின் பாகங்களை தானமாக வழங்கி 12 பேருக்கு வாழ்வளித்த பெற்றோரின் முடிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.