கேரளா | ”நாங்க கிளம்பிட்டோம்..” 23 நாட்களே ஆன குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு சென்ற தம்பதி!
கேரளாவில் பிறந்து 23 நாள் ஆன குழந்தையை ஐசியுவில் தனியாக விட்டுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர்.
கேரள மாநிலம் கொச்சியில், பிறந்து 23 நாட்களே ஆன குழந்தையை பெற்றோர்களே சுமையாக நினைக்க அதை மருத்துவமனையிலேயே அனாதையாக்கி விட்டு சென்ற அவலம் அப்பகுதியினரிடையே வேதனையை அளித்துள்ளது.
ஜார்க்கண்டைச் சேர்ந்த மங்களேஸ்வர் மற்றும் ரஞ்சிதா தம்பதியினர் கோட்டயத்தில் உள்ள ஒரு மீன் பண்ணையில் வேலை செய்து வருகின்றனர். கடந்த ஜனவரி 29ம் தேதி பிரசவத்திற்காக வீடு திரும்பும் வழியில் ரஞ்சிதா ரயிலில் அசௌகரியமாக உணர்ந்துள்ளார். அதனால் அவரை மங்களேஸ்வரர் எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் பிறந்த குழந்தைக்கு சில மருத்துவ சிகிச்சை தேவைப்பட அக்குழந்தையை மருத்துவர்கள் அருகிலிருந்த லூர்து மருத்துவமனையில் NICUக்கு மாற்றியுள்ளனர்.
ரஞ்சிதா பொதுமருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்துள்ளார். மங்களேஸ்வரர், மனைவியையும், குழந்தையையும் மாறிமாறி பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், ரஞ்சிதா உடல் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் குழந்தை தொடர்ந்து NICU ல் இருந்து வந்துள்ளது. குழந்தைக்கு மருத்துவம் பார்க்க கையில் பணம் இல்லாததாலோ அல்லது, பெண்குழந்தை என்பதாலோ பெற்றோர்கள் இருவரும் குழந்தையை பிறந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு செல்ல நினைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 31ம் தேதி ரஞ்சிதாவும், மங்களேஸ்வரரும் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் பிறந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
தாய்ப்பால் கொடுக்க அம்மா இல்லை அன்பும் அரவணைப்பும் கொடுக்க அப்பா இல்லாத நிலையில் பிறந்த குழந்தை அனாதையாக லூர்து மருத்துவமனையில் இருப்பதைக்கண்ட மருத்துவர்கள், மங்களேஸ்வரர் ரஞ்சிதாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் தம்பதியினர் ஜார்க்கண்ட் திரும்பிவிட்டதாக மருத்துவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், குழந்தைக்கு இன்னும் ஒருமாதகாலம் சிகிச்சை தேவைப்படுகிறது என்றும், தற்பொழுது குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் குழந்தைக்கு ”ரஞ்சிதாவின் குழந்தை” என்று பெயரிட்ட மருத்துவர்கள் குழந்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குழந்தை நலமானதும் கண்டிப்பாக பெற்றோர்கள் குழந்தையைத் தேடி வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.