சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்டது மட்டுமின்றி, அதனை மலைப்பாம்பு இறைச்சி எனக்கூறி விற்கவும் முயன்றுள்ளார்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கோத்தமங்கலம் வனச்சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் மர்மநபர் ஒருவர் பாம்புகளை பிடித்து சமைத்து சாப்பிடுவதாகவும், அதனை இறைச்சியாக விற்று வருவதாகவும் வனத்துறையினருக்கு ஒரு ‘பகீர்’ தகவல் வந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய வனத்துறையினர் நேரியமங்கலத்தைச் சேர்ந்த வி.ஜே. பிஜூ என்பவரை நேற்று கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், ‘’ பிஜு சாரைப் பாம்புகளை பிடித்து தோலுரித்து அதனை கறிக்குழம்பு போன்று சமைத்து சாப்பிட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து சமைத்த இறைச்சிகளையும் பறிமுதல் செய்துள்ளோம். மேலும் அவர் சாரைப்பாம்பு இறைச்சியை மலைப்பாம்பு இறைச்சி எனக்கூறி விற்பனை செய்யவும் முயன்றுள்ளார்’’ என்றனர்.
‘'சாரைப் பாம்புகள் 1972 வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி, பாதுகாக்கப்பட்ட பட்டியலில் உள்ளது. இதை துன்புறுத்துவது, அடித்துக் கொல்வது சட்டப்படி குற்றம். இறைச்சிக்காக பாம்புகளை கொல்வது இதுவரை என் வாழ்க்கையில் நான் சந்தித்திராத வழக்கு’ என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

