பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணிடம் 'பாவச் செயலில்' ஈடுபட்ட பாதிரியார்கள் !
கேரளாவில் பாவமன்னிப்பு கேட்கவந்த பெண்ணை பாதிரியார்கள் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக சர்ச் நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள சர்ச்சில் அம்மாநிலத்தை சேர்ந்த நால்வரும் டெல்லியை சேர்ந்த ஒருவரும் பாதிரியாராக உள்ளனர். இந்நிலையில் சர்ச் நிர்வாகத்திற்கு திருவலாவைச் சேர்ந்த ஒருவர் எழுதிய கடிதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அதில் பாவமன்னிப்பு கேட்க வந்த எனது மனைவியை 5 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் சர்ச் நிர்வாகி ஒருவரும் பேசிய ஆடியோ பதிவுகள் வெளியாகியுள்ளது. அதில், திருமணத்திற்கு தனது மனைவி பாதிரியார் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு அந்த நபர் தொடர்ந்து தொந்தரவு செய்துவந்துள்ளார். இந்நிலையில் மகளின் ஞானஸ்தானத்தின் போது, இதுகுறித்து மற்றொரு பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்டுள்ளார். பாவமன்னிப்புகளை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய பாதிரியாரோ எனது மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதனை மற்ற மூன்று பாதிரியாரிடமும் தெரிவித்துள்ளார். அவர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பேசியுள்ளார். மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சர்ச் நிர்வாகம், புகார் தெரிவிக்கப்பட்ட 5 பாதிரியார்களும் அவர்களது பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். உரிய விசாரணைக்கு பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து இதுவரை காவல்நிலையத்தில் எந்தப்புகாரும் தெரிவிக்கப்படவில்லை. சமூகவலைதளத்தில் ஆடியோ பேச்சு பரவியதையடுத்து இந்தவிவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.