கேரளா: மாற்றுத்திறனாளி பெண் உயிரிழந்த வழக்கு - கணவர் குற்றவாளி என தீர்ப்பு
கேரளாவில் மாற்றுத்திறனாளி பெண் உயிரிழந்த வழக்கில் அவரது கணவரே பாம்பை கொண்டு கொலை செய்தது உறுதியாகியுள்ளதால் அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த உத்ரா என்ற மாற்றுத்திறனாளி பெண், கடந்த ஆண்டு மே மாதம் வீட்டில் இறந்து கிடந்தார். முதல்கட்ட விசாரணையில் அவர் பாம்பு கடித்து இறந்தது தெரியவந்தது. எனினும் உத்ராவின் கணவர் சூரஜ் வரதட்சணை கேட்டு அடிக்கடி சண்டையிட்டதால் அவர் மீது சந்தேகமடைந்து உத்ராவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து சூரஜை கைது செய்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மறுமணம் செய்ய வேண்டுமென்ற ஆசையில் உத்ராவிற்கு தூக்க மாத்திரை கொடுத்து பாம்பை விட்டு கடிக்க செய்ததை சூரஜ் ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் சூரஜை குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்களை புதன்கிழமை அறிவிப்பதாகவும் கூறியுள்ளது.

