மாட்டிறைச்சிக்கு 'கோமாதா' பெயர்... கேரள 'சர்ச்சை நாயகி'-யைக் கண்டித்த நீதிமன்றம்!

மாட்டிறைச்சிக்கு 'கோமாதா' பெயர்... கேரள 'சர்ச்சை நாயகி'-யைக் கண்டித்த நீதிமன்றம்!
மாட்டிறைச்சிக்கு 'கோமாதா' பெயர்... கேரள 'சர்ச்சை நாயகி'-யைக் கண்டித்த நீதிமன்றம்!

கேரளாவாவைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா மீண்டும் சர்ச்சையில் சிக்கி நீதிமன்றத்தால் கடும் எச்சரிக்கையை சந்தித்து இருக்கிறார்.

கேரளாவின் 'சர்ச்சை நாயகி' எனப் பெயர் பெற்றவர் ரெஹானா பாத்திமா. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நேரத்தில் இவர், கனக துர்கா உள்ளிட்ட சில பெண்கள் சபரிமலைக்குள் நுழைய முயற்சி செய்து அப்போது பரபரப்பை ஏற்படுத்தினர். அது முடியாமல் போனது. எனினும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய விஷயங்களில் ரெஹானா பாத்திமா ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் 'பாடி ஆர்ட் அண்ட் பாலிட்டிக்ஸ்' என்ற பெயரில் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார் ரெஹானா. அதில் அரை நிர்வாண கோலத்தில் தன் குழந்தைகள் முன் பாத்திமா இருக்க, அவரின் இரண்டு குழந்தைகளும் அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்தனர். மேலாடை இல்லாமல் குழந்தைகள் முன்பு பாத்திமா இருந்த அந்த வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்த நீதிமன்றம் வரை விவகாரம் சென்றது. நீதிபதி கடுமையான கண்டனம் தெரிவிக்க, மீண்டும் சிறை செல்ல நேர்ந்தது ரெஹானா பாத்திமாவுக்கு. எனினும் மன்னிப்புக் கோரிய பின் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் ரெஹானா. சமீபத்தில் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரெஹானா, தான் செய்த மாட்டிறைச்சிக்கு 'கோமாதா உலர்த்தியது' எனப் பெயர் வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சமைக்கும்போதும் செய்முறையையும் தயாரிப்பையும் விவரிக்கும்போது, மாட்டிறைச்சியை "கோமாதா" என்று மீண்டும் மீண்டும் பதிவு செய்தார். வழக்கமாக கேரள கடைகளில், வீடுகளில் இந்த உணவை ''பீஃப் உலர்த்தியது'' என்றே அழைத்து வந்த நிலையில் ரெஹானா பாத்திமாவின் செயல் சர்ச்சையைத் தூண்ட, வழக்கம்போல் இந்த விவகாரம் நீதிமன்ற படியேறியது.

கேரள உச்ச நீதிமன்ற நீதிபதி சுனில் தாமஸின் ஒற்றை அமர்வு பெஞ்ச் விசாரணைக்கு வந்தபோது, ரெஹானா பாத்திமா கடுமையாக எச்சரிக்கப்பட்டார். '' 'கோமாதா' சொல் இந்து வேதங்களில் புனிதமான பசுவைக் குறிக்கும் என்பதில் எந்தவிதமான சர்ச்சையும் இருக்க முடியாது. வேதங்கள், வேத காலத்திலிருந்து பசு தெய்வங்களைப் போலவே புனிதமாக மதிக்கப்படுகின்றன. இது நாடு முழுவதும் உள்ள பல லட்சம் இந்துக்களால் நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட, 'கோமாதா' என்ற வார்த்தையை சமையல் நிகழ்ச்சியில் இறைச்சிக்கு ஒத்ததாக பயன்படுத்துவது பல லட்சம் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்த வாய்ப்பு உள்ளது.

'கோமாதா உலர்த்தியது' என்ற வார்த்தையின் தேர்வு தவறான உந்துதல் மற்றும் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. இதுபோன்ற மிகவும் ஆட்சேபிக்கத்தக்க வீடியோவை பொது பார்வைக்கு பதிவேற்றுவது பக்தர்களின் அடிப்படை உரிமையை பாதிக்கலாம். ஏற்கெனவே ஜாமீனில் உள்ள ரெஹானா பாத்திமாவுக்கு (2018 சபரிமலை வழக்கில் ஜாமீனில் இருக்கிறார்), எந்தவொரு மத சமூகத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது அந்த நிபந்தனைகளை மீறிவிட்டார். இதனால் ஜாமீனை ரத்து செய்ய போதுமான காரணம் இருக்கிறது.

அத்தகைய நடவடிக்கைக்கு செல்வதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக, எந்தவொரு சமூகத்தின் மத உணர்வுகளையும் தூண்டக்கூடிய பொருள் அல்லது கருத்துகளையும் வெளியிட, பகிர, பரப்ப அல்லது பரப்புவதற்கு காட்சி அல்லது மின்னணு என எந்த ஊடகங்களை ரெஹானா பாத்திமா பயன்படுத்தக் கூடாது. சபரிமலை வழக்கில் விசாரணை முடியும் வரை பாத்திமாவுக்கு இந்தத் தடை தொடரும். ஒவ்வொரு திங்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் காலை 9 மணி முதல் காலை 10 மணி வரை 3 மாத காலத்திற்கு சம்பந்தப்பட்ட நீதித்துறை காவல் நிலையத்தில் இது தொடர்பாக பாத்திமா அறிக்கை அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டார். மேலும் பாத்திமா பங்கேற்ற சமையல் நிகழ்ச்சியின் வீடியோவை வலைதளங்களில் இருந்து நீக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com