கிண்டலுக்கு பயந்து பிறந்த குழந்தையை விட்டுச்சென்ற பெற்றோர் கைது
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிட்டோ(32). இவருக்கும் பிரபிதா (28) என்பவருக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பிரபிதா நான்காவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். பிரபிதாவுக்கு பிரசவம் காலம் நெருங்கிய நிலையில் திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருந்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் நேராக கோச்சி பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு இரவு 8.15 மணியளவில் சென்றுள்ளனர். தேவாலயத்தின் வாயிலில் குழந்தையை வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
தேவாலயத்தில் இருந்த காவலர் 8.30 மணியளவில் குழந்தை இருப்பதை கண்டுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த அவர்கள் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருவர் குழந்தையை விட்டுவிட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து குழந்தையின் பெற்றோரை கைது செய்தனர்.
பிரிட்டோவிடம் நடத்திய விசாரணையில், தங்களுக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் என் மனைவி நான்காவது முறையாக கர்ப்பமானாள். இதனையறிந்த எங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கேலி செய்தனர். மற்றவர்களில் ஏளனப்பேச்சுக்கு பயந்தே குழந்தையை தேவாலயத்தில் விட்டு சென்றதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் பிரிட்டோ மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.