கேரளா நபர் மரணம்| மனித உரிமைகள் ஆணையத்தை நாடிய பெற்றோர்.. பெண் மீது வழக்குப்பதிவு!
கேரளாவில் 42 வயது தீபக், பேருந்தில் இளம்பெண்ணை தொட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவமானத்தால் தற்கொலை செய்துகொண்டார். வீடியோவை வெளியிட்ட பெண்ணின் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபக்கின் பெற்றோர் மனித உரிமைகள் ஆணையத்தை நாடி, விரிவான விசாரணை கோரியுள்ளனர்.
கேரளா மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபர் தீபக். இவர் துணைக்கடை ஒன்றில் வேலைபார்த்துவந்துள்ளார். தன்னுடைய வேலை சம்பந்தமாக கடந்த 15ஆம் தேதி கண்ணூர் சென்ற அவர், பையனூரில் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது பேருந்தில் பயணம் செய்த தீபக், அருகிலிருந்து இளம்பெண்ணை பாலியல் ரீதியாக தொட்டு அநாகரீகமாக நடந்துகொண்டதாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது.
வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர்ந்த ஷிம்ஜிதா முஸ்தபா என்ற இளம்பெண், தன்னுடைய மொபைலில் செல்ஃபி வீடியோ ஒன்றை தீபக்கிற்கு தெரியாமல் எடுத்து இணையத்தில் பதிந்துள்ளார். இந்த வீடியோ 20 லட்சத்துக்கும் மேலான வியூஸ்களை கடந்ததோடு, சம்பந்தப்பட்ட தீபக் என்பவர் மீது எதிர்மறையான கமெண்ட்களும், வசைபாடுதல்களும் எழ வழிவகை செய்தது. இந்த விவகாரம் குறித்து காவல்துறையில் வழக்கு பதிவுசெய்யப்படாமல் வீடியோ நேரடியாக ஆன்லைனில் அப்லோட் செய்யப்பட்டது.
இந்தசூழலில் தன்மீதான மோசமான பழியை பொறுத்துக்கொள்ள முடியாத தீபக், அவமானத்தால் அதிக மனஅழுத்தத்திற்கு சென்று தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். தீபக்கின் மரணத்திற்கு வீடியோ பரப்பிய பெண்மீது புகார்கள் அதிகமானதை தொடர்ந்து இயற்கைக்கு மாறான மரணம் என காவல்துறை புகாரை பதிவுசெய்தனர். ஆனாலும் அப்பெண் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு..
பாலியல் சீண்டல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட தீபக் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, வீடியோவை பகிர்ந்த பெண்மீது தான் தவறு என்றும், அவர் விளம்பரத்திற்காக இந்த குற்றத்தை செய்துள்ளார் என தீபக்கின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் அப்பெண் குறித்தும், வெளியிடப்பட்ட வீடியோவிற்கான பின்னணி குறித்தும் விரிவான விசாரணை வேண்டுமென கோரிக்கை வைத்த தீபக்கின் பெற்றோர், மனித உரிமைகள் ஆணையத்தை நாடப்போவதாக தெரிவித்திருந்தனர்.
இந்தசூழலில் மனித உரிமைகள் ஆணையத்தில் கோரப்பட்ட இரண்டு வழக்கறிஞர்களின் புகார்களை அடுத்து, பேருந்தில் பாலியல் சீண்டல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு உயிரிழந்த தீபக் மரணம் குறித்து டிஐஜி தலைமையிலான விசாரணைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தசூழலில் வீடியோவை வெளியிட்ட பெண் மீது, தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவில் காவல்துறையினர் வழக்கு பதிந்திருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன..

