கேரளா: கும்பலாக சேர்ந்து 17 வயது மாணவனை தாக்கும் சக மாணவர்கள்: ஒருவர் தற்கொலை!

கேரளா: கும்பலாக சேர்ந்து 17 வயது மாணவனை தாக்கும் சக மாணவர்கள்: ஒருவர் தற்கொலை!
கேரளா: கும்பலாக சேர்ந்து 17 வயது மாணவனை தாக்கும் சக மாணவர்கள்: ஒருவர் தற்கொலை!

17 வயது மாணவனை, சக மாணவர்கள் தாக்கும் கொடூர வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்கள் ஏழு பேர் கைது ஒரு மாணவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.


கேரளாவில் பருவ வயது எய்தாத சிறுவனை கூட்டமாய் சேர்ந்து கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்யும் வீடியோ கேரளாவில் வைரலானது. இதைத் தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தனர்.


அந்த வீடியோ எர்ணாகுளம் மாவட்டம் களமசேரியில் எடுக்கப்பட்டது தெரியவந்தது. வீடியோ ஆதாரங்களை கொண்டு விசாரணை நடத்திய போலீசார் வீடியோவில் உள்ள ஏழு பேரையும் கைது செய்தனர். கொடூரமாக தாக்கப்பட்ட மாணவன் 17 வயது நிரம்பிய சிறுவன் என்றும், 12ம் வகுப்பு மாணவன் என்பதும் தெரிந்தது. மாணவனை அலுவா அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர்.


தாக்கப்பட்ட மாணவர், சக நண்பர்களான இதர மாணவர்களின் மதுபான பழக்கத்தை அவர்களது வீட்டாருக்கு தெரியப்படுத்தியதால் ஆத்திரமடைந்த மற்ற ஏழு மாணவர்களும், 17 வயது மாணவனை ஏமாற்றி ஒரு வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து வந்து ஒன்று கூடி கொடூரமான தாக்கி சித்ரவதை செய்து மகிழ்ந்தது தெரியவந்தது.


இந்த சம்பவத்தில் 17 வயது மாணவனை தாக்கியதாக இதர ஏழு மாணவர்களை கைது செய்து அவர்கள் மீது சிறார் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட ஏழு மாணவர்களும் சிறார் என்பதால் அவரவர் பெற்றோரை அழைத்து, சிறார் குற்றப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தும், எச்சரிக்கையோடு பெற்றோரின் சொந்த ஜாமினில் அனுப்பியுள்ளனர்.


இந்நிலையில் பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஏழு பேரில், களமசேரி க்ளாஸ் காலனி பகுதியை சேர்ந்த மாணவரான நிபின் போல் என்பவர் மனமுடைந்து வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்தும் களமசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் குறித்து கேரள சிறார்கள் நல ஆணையம் போலீசாரிடம் விளக்கமும் கேட்டுள்ளனர். சக மாணவர்களின் இரக்கமற்ற இந்த செயல் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com