“போராட்டத்தை முடிக்காவிட்டால் 50% தனியார்மயமாக்கிவிடுவேன்” - சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை

“போராட்டத்தை முடிக்காவிட்டால் 50% தனியார்மயமாக்கிவிடுவேன்” - சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை
“போராட்டத்தை முடிக்காவிட்டால் 50% தனியார்மயமாக்கிவிடுவேன்” - சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை

போக்குவரத்து ஊழியர்கள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்ளாவிட்டால் 50 சதவீதம் போக்குவரத்து வழிதடங்களை தனியார்மயமாக்கிவிடுவேன் என்று தெலங்கனா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழகத்தை (TSRTC) முழுமையாக அரசுடன் இணைப்பது, காலிப் பணியிடங்களுக்குப் போதுமான ஆட்களை நியமிப்பது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்குவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கடந்த 5-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதையடுத்து அரசின் எச்சரிக்கையை மீறி, பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நீடித்து வருகிறது. பலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிலர் உயிரும் இழந்துள்ளனர். ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். 

இந்நிலையில், மூன்று நாட்களுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வாபஸ் பெறாவிட்டால் 50 சதவீதம் வழித்தடங்களை தனியார்மயமாக்கிவிடுவேன் என்று சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரகதி பவனில் இதுகுறித்து பேசிய அவர், “மூன்று நாள் அவகாசம் கொடுக்கிறேன். நவம்பர் 5 ஆம் தேதி நள்ளிரவுக்குள் அவர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி பணிக்கு திரும்பியிருக்க வேண்டும். இந்த கால அவகாசத்திற்குள் அவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அத்துடன் அவர்களது பணி முடிவுக்கு வந்துவிடும். நிரந்தரமாக அவர்கள் வேலையை இழக்க நேரிடும்.

தெலங்கனா மாநில சாலை போக்குவரத்து கழகத்தால் மொத்தம் 10,400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், 2100 பேருந்துகள் தனியாரிடம் வாடகைக்கு எடுத்து இயக்கப்படுகிறது. 3000 பேருந்துகள் மோசமான நிலையில் உள்ளது. அதனால், 5100 பேருந்துகளை தனியாருக்கு அனுமதி கொடுக்கப்படும். மீதமுள்ள 5300 பேருந்துகள் போக்குவரத்து கழகத்தின் வசம் இருக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com