
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கிடையே அறிவித்தார்.
காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க, பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அங்கு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதல் படைகள் குவிக்கப் பட்டு வருவதால், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் ஒமர் அப்துல்லா ,மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டுள்ளனர். வீட்டை விட்டு வெளியேற அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்றுகாலை ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை 307-ஐ நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவை நாடாளுமன்றத்தில் அமித் ஷா அறிவிப்பதற்கு வந்தார். முதலில் மாநிலங்களவைக்கு வந்த அவர், பேச தொடங்கும் முன், காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், காஷ்மீரில் நடப்பது என்ன? அங்கு போர் சூழல் நிலவுவதால் அதுபற்றி விளக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அவருக்கு ஆதரவாக சில எம்.பிகள் குரல் கொடுத்தனர். அவர்களை சமாதானப்படுத்திய அவை தலைவர் வெங்கையா நாயுடு, அமித் ஷாவை பேச அழைத்தார். அவர் பேசிய பிறகு விவாதத்துக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றார். இதை உறுப்பினர்கள் ஏற்காததால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
பின்னர் கடும் அமளிக் கிடையே, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு நீக்குவதாக அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதை ஏற்காமல் உறுப்பினர்கள் பேசியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.