பீகார்: என்னது காஷ்மீர் தனிநாடா? - 7ஆம் வகுப்பு ஆங்கிலப் பாட கேள்வித்தாளால் சர்ச்சை

பீகார்: என்னது காஷ்மீர் தனிநாடா? - 7ஆம் வகுப்பு ஆங்கிலப் பாட கேள்வித்தாளால் சர்ச்சை
பீகார்: என்னது காஷ்மீர் தனிநாடா? - 7ஆம் வகுப்பு ஆங்கிலப் பாட கேள்வித்தாளால் சர்ச்சை

பீகார் மாநிலத்தில் 7-ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தின் கேள்வித்தாளில், காஷ்மீர் நாட்டைச் சேர்ந்த மக்களை எப்படி அழைப்பார்கள் என்று கேட்கப்பட்டிருந்த கேள்வி, புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பீகார் மாநிலத்தில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, கடந்த 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பருவத் தேர்வு நடைபெற்றது. இதில் 7-ம் வகுப்புக்கான ஆங்கில பாடத்தின் கேள்வித்தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்விதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆங்கிலப் பாட கேள்வி ஒன்றில், "கீழ்க்கண்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் எவ்வாறு அழைக்கப்படுவார்கள்?" என கேட்கப்பட்டிருந்தது. மேலும் அதில் உதாரணமாக சீனாவைச் சேர்ந்த மக்கள் சீனர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்ற கொடுக்கப்பட்டிருந்த நிலையில், நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்படுவார்கள்? என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. 

இந்தக் கேள்வி தான் தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இந்த கேள்வித்தாள் பீகாரில் உள்ள அராரியா, கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது. இது பெரும் விவாதத்தை உண்டாக்கிய நிலையில், இதுகுறித்து பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் கூறுகையில், “இந்த கேள்வித்தாள் மாநில கல்வித்துறையிடம் இருந்து வந்தது. காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் எப்படி அழைக்கப்படுவார்கள்? என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால் தவறுதலாக காஷ்மீர் நாட்டு மக்கள் எவ்வாறு அழைக்கப்படுவார்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது மனிதர்களின் கவனக்குறைவால் நடந்த பிழை” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரி பதிலளிக்க மறுத்துவிட்ட நிலையில், கல்வியாளர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் இதில் சதி உள்ளது என்றும், இது குறித்து மத்திய கல்வித்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் இந்த விவகாரம் குறித்து தனது சமூகவலைதளத்தில், “இந்த விஷயத்தில் பீகார் மாநில அரசு மவுனமாக உள்ளது எனக்கு கவலை அளிக்கிறது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பகுதி அல்ல என அவர்கள் நிநினைக்கிறார்கள். நேபாளம், இங்கிலாந்து, சீனா, இந்தியா போன்று, காஷ்மீரும் தனி நாடு என்று பீகார் அதிகாரிகள் நினைக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “நிதிஷ் குமார், பிரதமராக வேண்டும் என ஓய்வு இல்லாமல் உழைத்து வருவதால், மாணவர்கள் மத்தியில் தேச விரோத சிந்தனை உட்புகுத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டிலும் பீகாரில் இதேபோன்ற கேள்வி கேட்கப்பட்டிருந்ததை, வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com