“அரை மணி நேரம் படித்தும் ஒன்றும் புரியவில்லை”- காஷ்மீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், மனுதாரரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவை இந்திய அரசு ரத்து செய்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 ஆம் தேதி வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 370 வது சட்டப்பிரிவை நீக்கியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுமட்டுமில்லாமல், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மொத்தமாக 7 மனுக்கள் தொடரப்பட்டிருந்தன
இதே விவகாரம் தொடர்பாக, காஷ்மீர் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியர் அனுராதா பாசினும் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அரசியலமைப்புச் சட்டம் 14, 19, 21 ஆகிய பிரிவுகள் வழங்கும், கருத்துரிமை உள்ளிட்டவற்றை மறுக்கும் வகையில், காஷ்மீரில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மனுதாரரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். எம்.எல்.ஷர்மாவின் மனுவை சுமார் அரை மணி நேரம் படித்து பார்த்தும், மனுதாரரின் கோரிக்கையை புரிந்துகொள்ள முடியவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மனுவில் உள்ள அனைத்து பிழைகளையும் சரி செய்து மீண்டும் தாக்கல் செய்ய நீதிபதிகள் எம்.எல்.ஷர்மாவிற்கு அறிவுறுத்தினர். அத்துடன் 370-வது சட்டபிரிவு நீக்கத்திற்கு எதிராக மனுக்களில் உள்ள பிழைகளை சரிசெய்து மீண்டும் மனுதாக்கல் செய்ய 4 பேருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.