111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு

111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு
111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு

கர்நாடக மாநில சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

கர்நாடக மாநிலத்தில் தும்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவகுமார சுவாமி. இவருக்கு வயது 111.  இவர் கடந்த 15 நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் இன்று காலை 11.44 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்காக கர்நாடகத்தில் அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என துணை முதலமைச்சர் ஜி.பரமேஷ்வரா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் நாளை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகுமார சுவாமியின் உடல் அஞ்சலிக்காக நாளை மடத்தில் வைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட உள்ளன. 

இவரது சீடர்கள் இவரை ‘நடமாடும் கடவுள்’ என்று அழைத்து வந்தனர். மேலும் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதி பசவண்ணருக்கு அடுத்து நவீன பசவண்ணர் என்று இவர் அழைக்கப்பட்டு வந்தார்.

ஸ்ரீ சித்தகங்கா கல்வி அறக்கட்டளை சார்பில் 125 கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கல்வி, உணவு, தங்கும் விடுதி என வழங்கப்பட்டு வருகிறது. 

சிவகுமார சுவாமி, ராமநகரா மாவட்டத்தில் உள்ள வீரபுரா கிராமத்தில் கடந்த 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி பிறந்தார். இவரின் இயற்பெயர் சிவன்னா. கடந்த 1930 ஆம் ஆண்டில் விரக்தா ஆசிரமத்திற்கு சிவன்னா வந்து சேர்ந்தார்.

பிரதமர் மோடி, கர்நாடக முதலமைச்சர் குமாரசுவாமி, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, துணை முதலமைச்சர் பரமேஷ்வரா, அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பலர் சிவகுமார சுவாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி சிவகுமார சுவாமி மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “சிவகுமார சுவாமி மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். குறிப்பாக ஏழை எளிய மக்களிடம். வறுமை, பசி மற்றும் சமூக அநீதி போன்ற தீமைகளை அகற்றுவதற்காக அவர் தன்னை அர்ப்பணித்தார். 

சிவகுமார சுவாமி சிறந்த சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளை வழங்குவதில் முன்னணியில் இருந்தார். அவரின் கருணையும் சேவையும் ஆன்மிகமும் கீழ்தட்டு மக்களை பாதுகாத்தது. நான் ஸ்ரீ சிவக்குமார சுவாமியை மடத்தில் நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றிருக்கிறேன். அங்கு நடைபெறும் பரந்த அளவிலான சமூகசேவை முயற்சிகள் அவரது மறைவிற்கு பிறகும் தொடர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com