ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ - பாஜகவில் இணைவதாக தகவல்
கர்நாடகாவில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ உமேஷ் ஜாதவ் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் ரமேஷ் குமாரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார்.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த குமாரசாமி உள்ளார். கடந்த மே 12-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றினாலும் அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. அதன்படி குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றது முதலே அவருக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து சிக்கல்கள் வந்த வண்ணம் உள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதாக அப்பொழுதே செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படியொன்றுமில்லை, எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் உள்ளனர் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.
காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையிலான இந்தச் சலசலப்பு தற்போது நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கம் வரை தொடர்ந்து வருகிறது. அண்மையில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கப்பட்ட நிலையில் அதில் சிலர் நீக்கப்பட்டனர். மேலும் சிலர் தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் தங்கள் கட்சியில் இணைய உள்ளதாக பாஜகவினர் அவ்வபோது தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ உமேஷ் ஜாதவ் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் ரமேஷ் குமாரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். அவர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.