ஆணையர் பதவி விலகலுக்கு, என்னை குறை சொல்வதை ஏற்க இயலாது: மைசூர் துணை ஆணையர்

ஆணையர் பதவி விலகலுக்கு, என்னை குறை சொல்வதை ஏற்க இயலாது: மைசூர் துணை ஆணையர்

ஆணையர் பதவி விலகலுக்கு, என்னை குறை சொல்வதை ஏற்க இயலாது: மைசூர் துணை ஆணையர்
Published on

மைசூர் மாநகராட்சி ஆணையர், பதவி விலகியதன் பின்னணியில் தான் இருப்பதாக கூறியிருப்பதை, மறுத்திருக்கிறார் மாவட்ட துணை ஆணையர்.

மைசூர் மாநகராட்சி ஆணையர் ஷில்பா நாக், தனிப்பட்ட காரணங்களுக்காக தன் மீது கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் பற்றிய தவறான கருத்துகளை மைசூர் மாவட்டத்தின் துணை ஆணையர் ரோஹினி சிந்தூரி பரப்புவதாகவும், அதன்மூலம் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறி தன் பதவியை நேற்று முன்தினம் (ஜூன் 3) ராஜினாமா செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று (ஜூன் 4) சிந்தூரி தன்தரப்பு  விளக்கத்தை அளித்தார். அதில், ‘மாநகராட்சி கொரோனா பரவல் தரவுகள் மற்றும் 12 கோடி ரூபாய் மதிப்பிலான பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வு நிதி (சி.எஸ்.ஆர்.) செலவிடப்பட்ட தகவலை கேட்டிருந்தேன், அதை நான் குறை கூறுவதாக எடுத்துக்கொண்டார் ஷில்பா நாக்’ என்று சொல்லியிருந்தார் ரோஹினி.

இதுபற்றி சிந்தூரி பேசுகையில், “கொரோனா பரவல் தொடர்பான மைசூரின் தெளிவான கிராம பஞ்சாயத்து மற்றும் வார்டு ரீதியான தரவுகளை ஷில்பா நாக்கிடம் கேட்டிருந்தேன். ஜூலை 1 ம் தேதிக்கு பிரகு, மைசூரில் தளர்வுகள் அமல்படுத்தப்படலாம் என்பதை அறிய இதை கேட்டிருந்தேன்.

முன்னுக்கு பின்னான அவருடைய முரணான தரவுகளை அடிக்கோடிட்டு காண்பித்து அதன் பின்னணியை கேட்டேன். அப்போது 12 கோடி ரூபாய் மதிப்பிலான சி.எஸ்.ஆர். நிதிகளை அவர் எப்படி செலவுசெய்தார் என்பதை விசாரித்தேன். முழுமையாக அந்தப் பணம் மாநகராட்சிக்குத்தான் செயல்படுத்தப்பட்டதா என்பதை பற்றி கேட்டேன்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையான ‘கிராமங்களை நோக்கி மருத்துவர்கள்’ என்ற திட்டத்துக்கு இந்த சி.எஸ்.ஆர். நிதிகளை செலவிட ஏற்கெனவே நாங்கள் தர திட்டமிட்டோம். ஆகவே அதற்கு எவ்வளவு நிதி செலவிடப்பட்டது என்று கேட்டிருந்தேன். அவை எங்கே போனது, எப்படி செலவானது, எப்படி உபயோகப்படுத்தப்பட்டதை அறிய வேண்டியே இதை செய்தேன்.

இந்த தகவல்களை, தற்போதுவரை ஷில்பா நாக் சொல்லவே இல்லை. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதைவிடுத்து, முதல்நாள் 400 புதிய தொற்றாளர்கள் – அடுத்த நாள் 40 புதிய தொற்றாளர்கள் என்று சொன்னால், அது சரியில்லை. இந்த முரண்பாடுகள், கோவிட் கட்டுப்பாட்டு அறைக்குள் இருப்பது நல்லதில்லை.

இந்த விவகாரம் தொடா்பான அனைத்து விவரங்களையும் தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாரிடம் தெரிவித்துவிட்டேன். விளக்கமும் அளித்துள்ளேன்” எனக்கூறியுள்ளார்.

இந்நிலையில், தன் கவனத்துக்கு கொண்டு வராமல் எதற்காக ஷில்பா நாக் பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டி, குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தினார் என்பது பற்றி, தலைமைச் செயலாளர் பி.ரவிக்குமார் அவரிடம் கேள்வி எழுப்பியிருப்பதாக தெரிகிறது.

சலசலப்புகளைத் தொடர்ந்து, அம்மாநில அரசாங்கம், மைசூர் ஆணையருக்கு ‘சிந்தூரியின் அலுவலக குடியிருப்பில், 50 லட்சம் ரூபாய்க்கு நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடங்கள் கட்டப்பட்டிருப்பது ஏன்’ என விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதன் விவரங்கள், ஜூன் 7 ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி இதுபற்றி கருத்து தெரிவிக்கும்போது, “மாநில அரசின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாடுதான் இது. மாநகர ஆணையரும், துணை ஆணையரும் இப்படி பொதுவெளியில் சண்டைப்போட்டுக் கொண்டுள்ளனர். அரசர் எவ்வழியோ, அவரின் மக்களும் அவ்வழி தானே!” என விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com