கர்நாடகாவில் 7 ஆம் வகுப்பு வரை "ஆன்லைன்" வகுப்புகளுக்குத் தடை
கர்நாடக மாநிலத்தில் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்துவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளும் மூடப்பட்டன. இதனிடையே இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுத் தேர்வு இல்லாமலேயே அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவர் என அறிவிப்பு வெளியானது.
இதனைத்தொடர்ந்தும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், தனியார்ப் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்த ஆரம்பித்தன. இந்நிலையில் கர்நாடகாவில் மாணவர்களின் வயது மற்றும் மனநலம் ஆகியவற்றைக் கருதி மழலையர் குழந்தைகள் முதல் 5 ஆம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தக்கூடாது எனக் கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சுரேஷ் குமார் “ மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகள் மூலம் நடத்தப்படும் வகுப்புகள் குறித்து விவாதிக்கத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் குறித்து வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நாங்கள் மனநல மருத்துவர்களிடமும் விவாதித்தோம். அதன்படி தற்போது மழலையர் குழந்தைகளுக்கான வகுப்புகள் முதல் 7-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தத் தடைவிதிக்கப்படுகிறது." என்றார்.
மேலும் தொடர்ந்த அவர்" இதனைத் தவிர்த்துப் பிற வகுப்புகளுக்கான ஆன்லைன் வகுப்புகளைப் பள்ளிகள் தொடரலாம். ஆன்லைனில் நடத்தப்படும் சில குறிப்பிட்ட வகுப்புகளுக்கான, சரியான கால நேரம் குறித்து பின்னர் விவாதிக்கப்படும். ஆன்லைனில் பாடங்கள் நடத்துவதற்கான கட்டணம் அமல்படுத்தப்படும்" எனக் கூறியுள்ளார்.