கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை கண்டதும் சுட அம்மாநில அரசு உத்தரவிட்டது.
கர்நாடக மாநிலத்தின் பிரபலமான மலைவாசத்தளம் குடகு மாவட்டம். இங்கு கடந்த சில வாரங்களாக ஆட்கொல்லி புலி ஒன்று உலா வருவதாக உள்ளூர்வாசிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினரும் தேடுதல் வேட்டையை தொடங்கினர். ஆனால் இது எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அந்தப் புலி 8 வயது சிறுவனை தாக்கி கொன்றது. இந்தச் சம்பவம் பெல்லூரு கிராமத்தில் நிகழ்ந்தள்ளது.
இதனால் குடகு மாவட்டமே பீதியில் உறைந்தது. அந்த ஆட்கொல்லி புலி இதுவரை 4 பேரை கொன்றது. இந்தச் சம்பவம் குறித்து கர்நாடக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய குடகு மாவட்டத்தின் எம்எல்ஏ கேஜி போப்பையா "வனத்துறையால் ஆட்கொல்லி புலியை பிடிக்கவோ கொல்லவோ முடியவில்லை என்றால் எங்களிடம் தெரியப்படுத்தவும். நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து புலியை கொன்று அதனை கொடவா இனத்தின் முறைப்படி கல்யாணம் செய்துக்கொள்வோம்" என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய அம்மாநில வனத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவலி "வனத்துறை அதிகாரிகளிடம் ஆள்கொல்லி புலியை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.