தாக்க வந்த மாட்டிடம் இருந்து தனது தம்பியை சமயோஜிதமாகக் காத்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
கர்நாடகா மாநிலம் ஹெனாவர் பகுதியில் ஆர்த்தி என்ற 8 வயது சிறுமி தனது தம்பியுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மாடு ஒன்று அந்த சிறுவனை நோக்கி பாய்ந்தது. உடனடியாக சுதாரித்த சிறுமி ஆர்த்தி தனது தம்பியை மறைத்து கொண்டு மாட்டின் தாக்குதலை எதிர்கொண்டார். அந்த சிறுமியின் மீது மாடு பல முறை முட்டியது. அதனையும் பாராமல் தைரியத்துடன் மாட்டிடம் இருந்து நகர்ந்து வெளியே சென்றார்.
பிறகு அவரின் கூச்சலை கேட்டு வந்த அவரின் தந்தை மாட்டை விரட்டியுள்ளார். இந்தக்காட்சி அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி இருக்கிறது. இது ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவியதை அடுத்து அந்த சிறுமிக்கு துணிச்சலுக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளன.