கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்கிறது?: நாளை மறுநாள் காங்., எம்எல்ஏக்கள் கூட்டம்
கர்நாடக அரசியலில் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை மறுநாள் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் சித்தராமையா கடிதம் அனுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருந்த எம்எல்ஏக்கள், அமைச்சர் பதவி கிடைக்காததால், அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் 13 பேர் நேற்று சபாநாயரை சந்தித்தனர். அவர்களில் 12 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, மும்பைக்கு சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து குமாரசாமியின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாஜக அவர்களை மறைத்து வைத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் அதனை மகாராஷ்ட்ரா பாஜக திட்டவட்டமாக மறுத்ததுடன், எம்எல்ஏக்கள் மும்பை வந்தது தங்களுக்கு தெரியாது என்றும் கூறியது.
இந்தச் சூழலில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக பாஜக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா, இந்த விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். தற்போது அரசியல் குழப்பம் ஏற்பட்டிப்பதை அடுத்து, கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாக மூத்தத் தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதையடுத்து நாளை மறுநாள் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தை கூட்டியிருக்கும் சித்தராமையா, இதில் பங்கேற்காத எம்எல்ஏக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.