உச்சநீதிமன்ற நீதிபதியாக வி.ராமசுப்பிரமணியனுக்கு பதவி உயர்வு
உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி பரிந்துரை செய்தது. இதனை ஏற்று மத்திய அரசு இந்த நான்கு நீதிபதிகளையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்துள்ளது. அதன்படி நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ரவீந்திர பட், ஹிரிஷிகேஷ் ராய், வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 23 வருடம் வழக்கறிஞராக பணியாற்றினார். அதன்பின்பு கடந்த 2006ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி பெற்றார். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் உயர்நீதிமன்றம் மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்றம் ஆகியவற்றிலும் நீதிபதியாக பதவி வகித்தார்.
(நீதிபதி வி.ராமசுப்பிரமணியன்)
தற்போது இவர் இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார். உச்சநீதிமன்றத்தில் இவரது பதவிக்காலம் வரும் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.