"என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது" ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட பத்திரிக்கையாளர் கொலை !

"என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது" ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட பத்திரிக்கையாளர் கொலை !
"என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது" ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட பத்திரிக்கையாளர் கொலை !

"என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது" எனக் கூறி பேஸ்புக்கில் இரண்டு மாதத்துக்கு முன்பு பதிவிட்ட பத்திரிக்கையாளர் இப்போது படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து 380 கி.மீ தூரத்தில் ஜான்சிக்கு அருகே இருக்கும் நிவாரி என்ற சிறிய நகரத்தில் இந்தி நாளிதழ் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் 30 வயதான சுனில் திவாரி. அவர் மே மாதத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.

அதில் "அவ்தேஷ் திவாரி, நரேந்திர திவாரி மற்றும் அனில் திவாரி ஆகிய நபர்களுக்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ரவுடிகளுடன் நெட்வொர்க்குகள் உள்ளன. நான் அவர்களை அம்பலப்படுத்தியுள்ளேன், அவர்கள் என் எதிரியாகிவிட்டார்கள். எனக்கு ஏதேனும் நேர்ந்தால், அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்" என அந்த வீடியோவில் கூறியிருந்தார். மேலும் அதில் நிவாரி மற்றும் ஜான்சி மாவட்ட எஸ்.பி., ஆட்சியர் ஜான்சி கலெக்டர் ஆகியோருக்கு கோரிக்கை வைத்தார்.

மேலும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாகக் கூறி உள்ளூர் போலீஸாரிடம் புகார் அளித்ததோடு ஆடியோ கிளிப்பையும் சுனில் திவாரி சமர்ப்பித்ததாக கூறினார். ஆனால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாமல் போலீஸார் அலட்சியம் காட்டியதாக கூறப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை இரவு தனது சகோதரருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த சுனித் திவாரியை சரமாரியாக அடித்தே கொன்றனர் மர்ம நபர்கள்.

இது குறித்து சுனில் திவாரியின் சகோதரர் கூறும்போது "என் கண்களுக்கு முன்னால் என் சகோதரனைக் கொன்றார்கள். அவர்கள் முதலில் வானை நோக்கி சுட்டார்கள். நாங்கள் தப்பிப்பதற்காக கீழே விழுந்தோம். ஆனால் அவர்கள் சுனிலை கம்புகளாலும், இரும்பு கம்பிகளாலும் அடிக்கத் தொடங்கினர். நான் ஓடிவந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தேன்" என்றார் அவர்.

இந்தக் கொலை தொடர்பாக பேட்டியளித்த நிவாரி நகர் காவல் கண்காணிப்பாளர் வாகினி சிங் "இது தொடர்பாக ஏழு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுனில் திவாரியின் உடலில் பல காயங்கள் இருந்தன. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அண்மையில் நிவாரி பகுதிக்கு எஸ்பியாக பொறுப்பேற்ற பின்னர் அவ்தேஷ் மீது பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதை அறிந்தேன். நான் சேர்ந்த ஒரு வாரத்திற்குள், அவர் குண்டாஸ் பட்டியலின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளார்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com