யோகி ஆதித்யநாத் பற்றி அவதூறு: செய்தியாளர், சேனல் ஆசிரியர் கைது!
உத்தரப் பிரதேச முதலமைச்சருக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாக பத்திரிகையாளர் மற்றும் டிவி சேனல் தலைமை ஆசிரியர், செய்தி ஆசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பெண் ஒருவர், தான் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்துக் கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகளை டெல்லியை சேர்ந்த செய்தியாளர் பிரஷாந்த் கனோஜியா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
(கனோஜியா)
இதையடுத்து கனோஜியாவிற்கு எதிராக லக்னோவில் உள்ள ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் டெல்லி மேற்கு வினோத் நகரில் உள்ள கனோஜியாவின் வீட்டுக்குச் சென்ற உத்தரபிரதேச போலீசார், அவரை அங்கிருந்து லக்னோவுக்கு அழைத்துச் சென்று கைது செய்தனர். முதலில் கைது செய்யவில்லை, விசாரித்து வருகிறோம் என்ற கூறிய போலீசார் பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண் பேசும் வீடியோவை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பியதை அடுத்து, அந்த சேனலின் தலைமையாசிரியர், செய்தி ஆசிரியர் ஆகியோரையும் உத்தரபிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.