புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லையா? நிர்வாகத்தின் பதில் என்ன?
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
கடந்த சில நாட்களாகவே ‘புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மரில், சிகிச்சைக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஜிப்மருக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை’ என்று அங்குள்ள எதிர்க்கட்சிகளிடமிருந்து குற்றச்சாட்டுகள் பல எழுந்தன.
இதற்கு ஜிப்மர் நிர்வாகம் தற்போது விளக்கமளித்துள்ளது. அதன்படி, “ஜிப்மருக்கு மத்திய அரசிடம் இருந்து போதிய நிதி கிடைக்கவில்லை என்றும் ஜிப்மரில் மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜிப்மருக்கான வருடாந்திர நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜிப்மருக்கு மானியமாக மத்திய அரசாங்கம் ரூ.1,490 (2022-23) கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளது.
இது 2018-2019 ஆம் ஆண்டில் ரூபாய் 976. 70 கோடியாக இருந்தது. கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டுகளில் 53 சதவீதம் இது அதிகரித்திருப்பது குறிப்பிட வேண்டியது. டெல்லியில் உள்ள AIIMS, சண்டிகாரில் உள்ள PGIMER போன்ற பிற ஒத்த நிறுவனங்களுக்கான ஒதுக்கீட்டின் அளவைவிட ஜிப்மருக்கான நிதி ஒதுக்கீடு அதிகமாக உள்ளது.
இதன்மூலம் மத்திய அரசு, நிதி ஒதுக்கீட்டில் எந்த குறைப்பும் செய்யவில்லை என்பது உறுதியாகி உள்ளது. மருத்துவமனையின் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக புதிய மேம்பட்ட நவீன உபகரணங்களை மருத்துவமனை நிறுவியுள்ளது. மேலும் ஜிப்மருக்கு 786 வழக்கமான பணியிடங்களை கூடுதலாக அனுமதித்துள்ளது மத்திய அரசு. இது இதற்கு முன்பு இருந்த பதவியிடங்களை விட கிட்டத்தட்ட 17 சதவீதம் அதிகமாகும். தவிர வெளிப்புற நோயாளிகளுக்கு தொடர்ந்து இலவசமாக மருந்துகளை வழங்கி வருகிறது அரசு.
கட்டணம் பெறுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையல்ல. தற்போதுள்ள சேவைகளுக்கான கட்டணங்களில் எந்த வித மாற்றமும் இல்லை. மேலும் 500 படுக்கையில் கொண்ட புதிய மருத்துவமனை கட்டுவதற்கான திட்டங்கள் தயாராக உள்ளன. எனவே எப்போதும் போலவே புதுச்சேரி மட்டும் அதை சுற்றி உள்ள மக்களுக்கு, குறிப்பாக நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்குவதில் ஜிப்மர் உறுதியாக உள்ளது. பல்வேறு ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அனைத்து வதந்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜிப்மர் நிர்வாகம் விரும்புகிறது” என தெரிவிக்கப்பபட்டுள்ளது.