மக்களவையில் பேசிய அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதாவில், யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படாது என எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தார்.
இன்று மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா “ஜம்மு காஷ்மீரின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டு 17 மாதங்களே ஆகின்றன, அங்கு நடந்த வளர்ச்சி திட்டங்கள் எல்லாவற்றிற்கும் கணக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் 70 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் ஜம்மு காஷ்மீருக்கு என்ன செய்தார்கள் என்று கணக்கு வைத்திருக்கிறார்களா” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2021ன்படி, ஜம்மு&காஷ்மீர் மாநில அந்தஸ்தைப் பெறாது என்று எங்கும் எழுதப்படவில்லை, நீங்கள் எங்கிருந்து இந்த முடிவுக்கு வருகிறீர்கள்? ஜம்மு-காஷ்மீருக்கு பொருத்தமான நேரத்தில் மாநில உரிமை வழங்கப்படும்” என தெரிவித்தார்
ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களான ஜம்மு& காஷ்மீர் மற்றும் லடாக் எனப் பிரிக்கப்பட்டது மற்றும் இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் அதன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, இதனால் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தனர்.