காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின், சகோதரி மற்றும் மகள் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது முதல் முக்கிய தலைவர்கள் பலரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அத்துடன் தொலைத்தொடர்பு சேவைகள் உட்பட அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டன. படிப்படியாக தொலைதொடர்பு மற்றும் செல்போன் இயக்கக்கங்கள் மீண்டும் பழைய நிலையை அடைந்துள்ளன.
இந்நிலையில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டதை எதிர்த்தும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரியும் அங்கு பெண்கள் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஃபரூக் அப்துல்லாவின் சகோதரி சுரையா மற்றும் மகள் சஃபியா ஆகியோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கையில் கறுப்பு பட்டைகளை அணிந்தும், பதாகைகளை ஏந்தியும் போராடினர். அப்போது அங்கு குவிந்த போலீஸார் அவர்களை கலைந்து செல்ல வற்புறுத்தினர். அதை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்க மறுக்கவே ஃபரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் சகோதரி உட்பட சிலரை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். மேலும், தேசிய ஊடகங்கள் பலவும் காஷ்மீர் நிலையை முழுவதுமாக காண்பிடிக்காமல், தவறான தகவலை கொண்டு போய் சேர்ப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.