காஷ்மீரைச் சேர்ந்த ஜமாத் - இ-இஸ்லாமி இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தக் கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து காஷீமீரில் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
பின்னர் அவர்களை கைது செய்து, அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் மற்றும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை 12 நிர்வாகிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அங்கு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, அங்கு செயல்பட்டு வரும் ஜமாத் - இ - இஸ்லாமி இயக்கத்துக்கு இப்போ து தடை விதித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும் அந்த மாநிலத் தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும் கூறி அந்த இயக்கத்துக்கு ஐந்து வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு நெருக்கமான இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.