பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தூக்கு- புதிய சட்ட மசோதாவுக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்
பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய சட்ட மசோதா ஆந்திரா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
தெலங்கானாவில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக தூக்கு தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய சட்ட மசோதா ஒன்றை ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டுவந்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீதான வழக்குகள் ஒரு வாரத்திற்குள் விசாரிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படுபவர்களுக்கு 21 நாட்கள் அதாவது 3 வாரங்களுக்குள் தூக்கு தண்டனை வழங்க புதிய சட்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு ஆந்திரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து மசோதா ஆந்திரா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
இதேபோல் பெண்களுக்கு எதிராக சமூகவலைதளங்களில் பதிவிடுவோருக்கு தண்டனை, எந்த காவல்நிலையத்தில் வேண்டுமானாலும் புகார் செய்யும் ZERO FIR வசதி உள்ளிட்டவை இந்த புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளன.