''என் கருத்தை வேறு மாதிரி திரித்துவிட்டனர்'' - நடிகர் பிரகாஷ்ராஜ்
தன் கருத்தை தவறான எண்ணத்துடன் வேறு மாதிரி திரித்துவிட்டனர் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பரப்புரை செய்த நடிகர் பிரகாஷ்ராஜ் ஆம் ஆத்மி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக சேர்ந்த மாணவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்வதால், டெல்லி மாணவர்களின் வாய்ப்பு பறிபோவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ், ''தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர போன்ற மாநிலங்களில் உள்ளூர் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். டெல்லி பல்கலைக்கழகம் சிபிஎஸ்இ முறையில் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்தில் உள்ள அரசும் கல்லூரிகளும் கிரேஸ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ஆனால் பாண்டிச்சேரிக்கும் டெல்லிக்கும் ஒதுக்கீடு கிடையாது. இது தான் பிரச்சினை.
டெல்லியிலுள்ள பள்ளிகளில் தமிழ் குழந்தைகள் கூட படிக்கிறார்கள் மற்ற மொழி குழந்தைகள் கூட படிக்கிறார்கள். அவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்க வரும் போது கூட இந்த பிரச்சினையை சந்திக்கலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகளால் தான் டெல்லிக்கு மாநில அந்தஸ்து தேவை. கெஜ்ரிவால் பேசும் போது உண்மையில் பிழை நடந்திருக்கலாம். அவர் தவறாகக் கூறவில்லை. அவர் வேதனையை வெளிப்படுத்தினார். உண்மையான விவகாரத்தை எடுத்து வைத்தார்'' என்று தெரிவித்தார். இதற்கிடையே பிரகாஷ்ராஜின் கருத்து தமிழக மாணவர்களுக்கு எதிராக உள்ளதாக கூறி பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரகாஷ்ராஜ், ''தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் வாய்ப்பு பறிபோவது உண்மைதான் என்று நான் சொல்லவில்லை. தவறான எண்ணத்துடன் என் கருத்தை வேறு மாதிரி திரித்துவிட்டனர்'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படுவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியது குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், திறமை அடிப்படையிலேயே தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதாக தெரிவித்தார்.