‘விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம்’-பினராயி விஜயன்
கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்க, அதானி குழுமத்திடம் ஒப்படைப்பதை கேரள அரசு ஒத்துழைப்பது கடினம் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொது மற்றும் தனியார் பார்ட்னர்ஷிப் (PPP) மூலம் அதானி குழுமத்திடம் ஐம்பது வருடங்களுக்கு குத்தகைக்கு விட மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
அதானி குழுமம் லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், மற்றும் குவஹாத்தி ஆகிய ஆறு விமான நிலையங்களை இயக்கும் உரிமையை 2019 பிப்ரவரியில் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய அரசின் முடிவை எதிர்த்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் இதை மறுபரிசீலனை செய்யுமாறும் அதில் வலியுறுத்தியுள்ளார்.
“மாநில அரசு முன்வைத்த வாதங்களுக்கு எந்தவித மதிப்பும் கொடுக்காமல் மத்திய அரசு ஒருதலைபட்சமாக எடுத்துள்ள முடிவைப் பார்க்கும்போது நாங்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பது கடினமாக இருக்கும். இது எங்கள் விருப்பத்திற்கு எதிராக எடுத்துள்ள முடிவு.
இதனால் இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மாநில அரசு முக்கிய பங்குதாரராக உள்ளதால் தனியாரிடம் விமான நிலையத்தை ஒப்படைக்க வேண்டாமென நாங்கள் பலமுறை வைத்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநில அரசு கொச்சி மற்றும் கண்ணூரில் உள்ள விமான நிலையங்களை சிறப்பாக நிர்வகித்து, மக்களுக்கு நல்ல விதமான அனுபவங்களை கொடுத்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதனால் திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.