கடல் வழியாக ஐஎஸ் பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்: உஷார் நிலையில் கேரளா
இலங்கையில் இருந்து 15 ஐஎஸ் பயங்கரவாதிகள் கேரளா, லட்சத்தீவு வழியாக ஊடுருவ இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கேரளாவின் கடல் எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 256 பேர் கொல்லப்பட்டனர். இதனால், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இலங்கை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் கேரளாவுக்கும் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் கேரளாவில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் உளவத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈட்டிருந்தனர்.
இந்த நிலையில் இலங்கையில் இருந்து 15 பேர் அடங்கிய ஐஎஸ் பயங்கரவதிகள் குழு, படகில் புறப்பட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கேரளாவில் உள்ள சிலர் ஐஎஸ் பயங்கவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து கேரள கடலோர மாவட்டங்களின் எஸ்பிக்களுக்கும் கடலோர பாதுகாப்புபடை ஏடிஜிபிக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது