மோகன் பகவத் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா? ஒவைசி கேள்வி
எந்த அடிப்படையில் ராமர் கோயில் அதே இடத்தில் கட்டப்படும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகிறார், அவர் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசதுத்தீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் கோயில் கட்டப்படும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதற்கு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, அயோத்தி பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இப்படி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை அவரால் எப்படி சொல்ல முடிந்தது என்றும், அவர் என்ன உச்சநீதிமன்ற நீதிபதியா அல்லது தீர்ப்பு இப்படித்தான் வரும் அவருக்கு தெரியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
எதன் அடிப்படையில் விஹெச்பி தலைவர்களில் ஒருவரான சுரேந்தர் ஜெயின், அக்டோபர் 18, 2018-ல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார் என்றும், அவர்களிடம் ஏதாவது ரகசிய தகவல்கள் உள்ளனவா என்று ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். நாளை டிசம்பர் 5 ஆம் தேதி அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.