எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளரா மமதா பானர்ஜி ?
சமீப காலமாக தேசிய அரசியலை கவனிப்பவர்கள் அடிக்கடி கேள்விப்படும் பெயர் மமதா. சில மாதங்களாக பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார். அனைத்து மாநில பிரச்னைகள் குறித்தும் கருத்து தெரிவிக்கிறார். எதற்கும் உடனடி பதில் கொடுக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் என்ற வார்த்தையை இந்த ஆண்டில் அதிகம் உச்சரிக்கிறார். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் பயணிக்கும் மேற்கு வங்கப் பெண்மணி. தென் மாநிலங்களையும் விட்டுவைக்காமல் அனைத்து இடங்களிலும் ஆஜராகிறார்.
அண்மையில் நடந்த காங்கிரசின் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் அல்லாத ஒருவரை பிரதமர் வேட்பாளராக்க முயலலாம் என ராகுல் காந்தி பேசியிருந்ததாக தகவல்கள் வெளியாகியது. மமதா அல்லது மாயாவதி ஆகிய இருவரில் ஒருவர் பிரதமர் வேட்பாளராக இருக்கலாம் என பேசப்பட்டது. அதே நேரத்தில் இது குறித்தெல்லாம் தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கலாம் என சிலரால் வலியுறுத்தப்பட்டது. இந்த சமயத்தில்தான் மமதா டெல்லிக்கு விசிட் அடித்தார். பாஜகவை எதிர்க்கும் பல தலைவர்களை சந்தித்தார். ஒவ்வொருவரிடமும் பாஜக எதிர்ப்பையே தனது தரப்பில் இருந்து முன்மொழிந்தார்.
மமதாவின் இந்த செயல்பாடுகள் பெரிய அளவில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க பயன்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் அணியில் இருந்து தேர்தலை சந்திக்கும் கட்சிகளாக உள்ள பலரும் தங்கள் தரப்பில் யாரையும் பிரதமர் வேட்பாளராக கேட்கவில்லை, ராகுல் பிரதமர் வேட்பாளராக வந்தாலும் அவர்களுக்கு பிரச்னையில்லை. அல்லது காங்கிரஸ் யாரைக் காட்டுகிறதோ அவர்களை வைத்து காய்நகர்த்த அனைவருமே தயாராக இருக்கிறார்கள். ராகுல் கூட காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பெற்றால் பிரதமராவேன் என்றார். ஆனால் தற்போதைய சூழலில் கூட்டணி இன்றி எதுவும் சாத்தியமில்லாத சூழலே உள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித்தலைவர் தேவ கௌடாவிடம் செய்தியாளர்கள் மமதாவை பிரதமர் வேட்பாளராக்கினால் ஏற்றுக் கொள்வீர்களா என கேட்கப்பட்டது. அவரும் மமதாவை அறிவித்தால் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார். மேலும் “ஆண்களே ஏன் பிரதமராக இருக்க வேண்டும், இந்திரா காந்தி பிரதமராக இருந்தாரே, மமதாவின் செயல்பாடுகள் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. அதானால் மமதாவோ, மாயாவதியோ பிரதமர் வேட்பாளராக்கப்பட்டால் எங்களுக்கு பிரச்னை இல்லை” என்றார். மாநில கட்சிகளும் கூட தேசிய கட்சியை சேர்ந்தவர்களே பிரதமர் வேட்பாளர்களாக இல்லாமல் பிராந்திய கட்சியினருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டால் நல்லதுதானே என எண்ணுகின்றனர்.