ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் வந்தது. அவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதாடினார். இதையடுத்து ப.சிதம்பரத்தை ஜூலை 3ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தும், இடைக்கால ஜாமீன் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
முன்னதாக, மத்திய அமைச்சராக இருந்தபோது விதிமுறைகளை மீறி ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீடு பெறுவதற்கு உதவி செய்ததாக, சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு சி.பி.ஐ. சம்மன் அனுப்பிய நிலையில் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை சிதம்பரம் நாடியிருந்தார்.

