ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு தடை நீட்டிப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், உண்மைகளை வெளியே கொண்டு வர, ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறை முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிராக ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு அமலாக்கத் துறைக்கு தடை விதித்து பல முறை உத்தரவிட்டது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை தடை உத்தரவை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன் ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து ஏற்கெனவே விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

