மத்திய பிரதேசத்தில் ஏழை எளிய ஆதரவற்ற முதியோரை இந்தூரிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய மாநகராட்சியின் மனிதாபிமானமற்ற செயல் காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் உள்ள ஷிப்ரா ஆற்றக்கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது இந்தூர் மாநகராட்சியின் வாகனம். அந்த வாகனத்திலிருந்து 10-க்கும் மேற்பட்ட முதியவர்கள் வலுக்கட்டாயமாக தங்கள் மூட்டை, முடிச்சுகளுடன் இறக்கிவிடப்பட்டனர். இந்த காட்சிகளை படம் பிடித்த உஜ்ஜைன் பகுதி மக்கள், ஆதரவற்ற முதியவர்களை ஏன் இங்கே விட்டு செல்கிறீர்கள்? என கேட்டு இந்தூர் மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தூய்மையான இந்தூர் திட்டத்திற்காக தங்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றுவதாக கூறி அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
மனிதாபிமானமற்ற இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டதையடுத்து, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழைகளுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவைக்கு சமமானது எனவும், இந்த சம்பவத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை எனவும் சிவராஜ் சிங் சவுகான் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இந்தூர் மாநகராட்சி துணை ஆணையர் பிரதாப் சோலன்கி மற்றும் 2 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.