வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை தனி நபர்கள் இணைக்காமல் போனால் அபராதம் கட்ட வேண்டி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் அபரதாம் செலுத்த வேண்டியது மட்டுமல்லாது பான் கார்டின் பயன்பாட்டையும் பயன்படுத்த முடியாமல் போகும் நிலை உருவாகும் என சொல்லப்பட்டுள்ளது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் 2021 நிதி மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் இந்த அபராதத்தை அரசு விதித்துள்ளது. இதற்கென வருமான வரி சட்டத்தில் ஒரு புதிய பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தனி நபர்கள் முடக்கப்பட்ட பான் கார்டை கொண்டு எந்தவொரு நிதி தொடர்பான பரிவர்த்தனையும் மேற்கொள்ள முடியாது. அரசு பலமுறை இதற்காக போதிய அவகாசம் கொடுத்து விட்டதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அதோடு அரசுக்கு வரியை கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும் என நிதித்துறையை சார்ந்த வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.