ஐஆர்சிடிசி மூலம் சில வழித்தடங்களில் ரயில்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு அளித்து ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரயில்வே துறையின் வாரிய தலைவர் வி.கே யாதவ், ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தனியாரைக் கொண்டு பயணிகள் ரயில்களை இயக்கும் திட்டமிருப்பதாகவும் தொழிலாளர் யூனியன்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே இது இறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
சுற்றுலாத் தலங்கள் மற்றும் மக்கள் நெரிசல் அதிகமில்லாத பகுதிகளில் தனியாரைக் கொண்டு ரயில்களை இயக்கலாம் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக ரயில்வேயின் சுற்றுலா மற்றும் டிக்கெட் பிரிவான IRCTC மூலம் இரண்டு தனியார் ரயில்களை இயக்குவதற்கான அனுமதி வழங்கப்பட உள்ளது.
டிக்கெட் வழங்குதல் மற்றும் ரயிலில் பயணிகளுக்கான சேவைகளை வழங்குவது உள்ளிட்ட பணிகளை ஐஆர்சிடிசியே மேற்கொள்ளும். ரயில் பெட்டிகளை ஐஆர்சிடிசி குத்தகைக்கு எடுத்து ரயில்வேயின் நிதிப்பிரிவிடம் அதற்கான தொகையை செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் தனியாரிடம் பணிகளை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் போடப்படும் எனக் தகவல்கள் கூறிகின்றன.