முன்பதிவு செய்த இருக்கையை வேறு சிலர் பயன்படுத்தியதை எதிர்த்து பயணி தொடர்ந்த வழக்கில், ரயில்வே 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
2013 மார்ச் 30-ம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து டெல்லிக்கு தக்ஷின் விரைவு ரயிலில் பயணிக்க விஜயகுமார் என்பவர் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், அவரது இருக்கையை வேறு சிலர் பயன்படுத்தியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பரிசோதகரிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்காத நிலையில், மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். விஜயகுமாருக்கு ரயில்வே நிர்வாகம் 75 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக அளிக்கவும், அந்த தொகையை பரிசோதகரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யவும் நுகர்வோர் ஆணையம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து ரயில்வே தரப்பில் மேல்முறையீடு செய்த நிலையில், மாநில நுகர்வோர் ஆணையம் அதை நிராகரித்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.