"ஒரே தேசம், ஒரே தேர்தல்!" - விவாதத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி

"ஒரே தேசம், ஒரே தேர்தல்!" - விவாதத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி
"ஒரே தேசம், ஒரே தேர்தல்!" - விவாதத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி

ஒரே தேசம், ஒரே தேர்தல் குறித்த விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவதற்குத் தயாராக வேண்டும் என்று கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் கெவாடியாவில் நடைபெற்ற 80-வது அகில இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற, பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "மகாத்மா காந்தியின் உத்வேகத்தையும், சர்தார் வல்லபாய் பட்டேலின் அர்ப்பணிப்பையும் நினைவு கூரும் நாள் இது. கடந்த 2008-ம் ஆண்டு இதே நாளில் மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர்கிறேன். அன்று வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையினருக்கு மரியாதை செலுத்துகிறேன். இன்று தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா புதிய வடிவில் போராடி வருகிறது.

கடந்த 1970களில், அதிகாரப் பிரிவினைக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் நல்லொழுக்கம் மற்றும் அதிகாரப் பிரிவினை குறித்து அரசியலமைப்பில் தெரிவித்துள்ளது போலவே, அரசியலமைப்பின் வாயிலாக அதற்கு விடை அளிக்கப்பட்டது. அவசரநிலைக்குப் பிறகு அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, சட்டமன்றம் நிர்வாகம் மற்றும் நீதித்துறையில், கட்டுப்பாடுகளும், இருப்புகளும் மேலும் கடுமையாக்கப்பட்டன. அரசின் 3 கிளைகளின்மீது 130 கோடி இந்தியர்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இது சாத்தியமாக்கப்பட்டது. இந்த நம்பிக்கை காலப்போக்கில் மேலும் வலுவடைந்துள்ளது. 

நமது அரசியலமைப்பின் வலிமை, நெருக்கடியான தருணங்களில் நமக்கு உதவிகரமாக இருக்கிறது. இந்தியத் தேர்தல் முறையின் நெகிழ்வுத் தன்மையும் கொரோனா பெருந்தொற்றில் நமது எதிர்வினையும் இதனை நிரூபித்துள்ளது. அண்மைக்காலங்களில் சிறந்த வெளிப்பாடுகளை வழங்கி, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஊதியக் குறைப்பை ஏற்றுக்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

சர்தார் சரோவர் அணை திட்டம் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்ததால் குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் மக்களுக்கு அதன் பயன்கள்  தடைபட்டு இருந்தது. அணை கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பின்னர், இந்தப் பலன்கள் அவர்களை எட்டியது.

நமது அரசியலமைப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. எனினும் கடமைகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் ஒரு சிறப்பு அம்சமாகும். மகாத்மா காந்தி இதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு இடையே ஓர் நெருக்கத்தை அவர் கண்டார். நமது கடமையை நாம் நிறைவேற்றும்போது நமது உரிமைகள் தாமாகவே பாதுகாக்கப்படுவதாக அவர் கருதினார்.

அரசியலமைப்பின் மாண்புகள் அனைவரையும் சென்றடைய வேண்டும். வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பது டிஜிட்டல் பாதுகாப்பிற்கு எப்படி ஓர் சிறப்பு அம்சமோ அதேபோல் உங்கள் தொகுதியைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பதும் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் கேடயமாக விளங்கும். அனைத்து சட்டங்களுடன் மக்கள் நேரடித் தொடர்பை உணரும் வகையில் சட்டத்தின் மொழி எளிமையானதாகவும் அவர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலும் அமைய வேண்டும். 

வழக்கொழிந்த சட்டங்களை நீக்கும் முறைகள் எளிமையானதாக இருக்க வேண்டும். சட்டத் திருத்தம் மேற்கொள்ளும்போது பழைய சட்டங்கள் தாமாகவே ரத்து செய்யப்பட்டுவிடும் முறையை உருவாக்கலாம்.

சில மாதங்களுக்கு ஒருமுறை தேசத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெறுவதைப் பார்க்கிறோம். இதனால் வளர்ச்சிப் பணிகள் தேக்கமடைவதை நாம் அனைவருமே அறிந்துவைத்திருக்கிறோம். எனவே ஒரே தேசம், ஒரே தேர்தல் முறைதான் தற்போது நாட்டிற்க்கு அவசியமானது. 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' குறித்த விவாதம் தேவை.

நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கென தனித்தனியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பது வீண்வேலை. இவை அனைத்திற்கும் ஒரே சமயத்தில் நடத்துவதற்கு பொதுவான வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தலாம். இதை செயல்படுத்துவதில், சட்டமன்றங்களில் டிஜிட்டல் புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்" என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com