தாய்-மகள் அன்புக்கு கிடைக்குமா பரிசு?
நோபல் பரிசுக்கு அடுத்தபடியாக உலகத்திலேயே இலக்கியத்திற்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘புக்கர்’ பரிசை, அறிமுக நாவலுக்காக பெறுவோர் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவ்னிதோஷி இடம்பிடித்துள்ளார். உலக அளவில் மொத்தம் தற்போது, 13 எழுத்தாளர்கள் இப்போட்டியில் இறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.
அவ்னி தோஷி
2020 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசுக்காக கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்தே உலகெல்லாம் இருக்கும் எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை அனுப்பிவைத்திருந்தார்கள். அதில், 162 நாவல்கள் புக்கர் பரிசுப்போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தற்போது 13 எழுத்தாளர்களின் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 6 பேரை மட்டும் அறிவிப்பார்கள். செப்டம்பர்-15 ந்தேதி அப்பட்டியல் வெளியிடப்படும். இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவ்னி தோஷிக்கு எழுதிய ‘பரன்ட் சுகர்’ நாவல்தான், அவரின் முதல் படைப்பு. அதுவே, புக்கர் பரிசுக்கு சென்றுள்ளது.
தற்போது, துபாயில் வசித்துவரும் தோஷி கடந்த ஆண்டு இந்தியாவில், இப்புத்தகத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தாய்க்கும் மகளுக்குமான அன்பை வெளிப்படுத்தும் நாவல் இது. இதில், வெல்லும் இறுதிப் போட்டியாளர்களுக்கு 50,000 பவுண்ட் பரிசு கிடைக்கும். 1969 ஆண்டிலிருந்தே வழங்கப்பட்டுவரும் புக்கர் பரிசை இந்தியாவில் அருந்ததிராய் போன்றவர்கள் பெற்றிருக்கிறார்கள். தாய்-மகள் அன்புக்கு கிடைக்குமா பரிசு? என்ற எக்ஸைட்மெண்டில் காத்திருக்கிறார்கள் இந்தியர்கள்.