இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை அருணா ஆசஃப் அலி பிறந்த நாள் இன்று
1942-இல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்க போராட்டத்தின்போது மூத்த தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்ட சூழலிலும் போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய ‘சிங்கப் பெண்’ தான் அருணா ஆசஃப் அலி.
சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலமான கால்கா நகரில் 1909-ஆம் ஆண்டில் வங்காள குடும்பத்தில் பிறந்தவர் அருணா ஆசஃப் அலி. அவரது தந்தை உபேந்திரா கங்குலி உணவகம் நடத்தி வந்தவர்.
லாகூர் சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்டில் பள்ளி படிப்பையும், நைனிடால் ஆள் சைன்ட்ஸ் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்துள்ளார். கல்கத்தாவின் கோகலே நினைவு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்.
நாட்டின் மீது தீரா பற்று கொண்ட அவர் விடுதலை போராட்டத்திற்காக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆசஃப் அலியை சந்தித்துள்ளார். இருவரது சிந்தனையும் ஒரே மாதிரியாக இருந்ததால் அதுவே அவர்களை வாழ்க்கை பயணத்திலும் கரம் கோர்க்க செய்துள்ளது. அன்றைய கால கட்டத்தில் சமய எதிர்ப்பை உடைத்தெறிந்த திருமணங்களில் அருணா ஆசஃப் அலியின் திருமணமும் ஒன்று.
உப்பு சத்தியாகிரக போராட்டம் உட்பட விடுதலைக்கான பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற அனுபவமும் அருணா ஆசஃப் அலிக்கு உண்டு. 1942இல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்க போராட்டத்தின் போது மூத்த தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்ட சூழலிலும் பேராட்டத்தை முன்னின்று வழிநடத்தினார். அந்த போராட்டத்தில் பல தடைகளை தகர்த்தெறிந்து பம்பாயின் கோவாலியா குள மைதானத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி பறக்கவிட்டவர்.
விடுதலைக்குப் பின்னர் சோசியலிச இயக்கத்தில் இணைந்து சமூகப் பணியை மேற்கொண்டார். டெல்லியின் முதல் மேயராகவும் நியமிக்கப்பட்டார். வார மற்றும் தினசரி பத்திரிகையை நடத்திய அனுபவமும் அவருக்கு உண்டு. டெல்லியில் அவரது 87வது வயதில் மறைந்தார். அவரது மறைவுக்கு பிறகு பாரத ரத்னா விருதை கொடுத்து கவுரவித்துள்ளது இந்திய அரசு.

