இந்தியாவிற்கான பாகிஸ்தான் துணைத் தூதருக்கு சம்மன்
இந்தியாவிற்கான பாகிஸ்தான் துணைத் தூதர் சையத் ஹைதர் ஷாவிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தபட்டது. இந்தத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லையில் விமானப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர். இருப்பினும், இன்று காலை எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது.
இதுதொடர்பாக, டெல்லியில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார், “பாகிஸ்தானின் எப்-16 விமானப்படை விமானம் ஒன்று எல்லையில் அத்துமீறிய போது, இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்தத் தாக்குதலின் போது மிக் 21 விமானத்தை நாம் இழந்துவிட்டோம்.
ஆனால், நம்முடைய விமானியின் நிலை குறித்து தெரியவில்லை. தங்கள் பிடியில் அந்த விமானி இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. அந்தத் தகவலை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பாகிஸ்தான் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தானின் துணைத் தூதரான சையத் ஹைதர் ஷாவிற்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்திய விமானிகள் இருவர் பாகிஸ்தானிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து உறுதி செய்யவும் மற்றும் பாகிஸ்தான் விமானம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததற்கு கண்டனம் தெரிவிக்கவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.