2020-21 நிதியாண்டிற்கான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலாண்டில் (Q1FY21) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 5 முதல் 25 சதவிகிதம் வரை சுருங்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
அது குறித்த அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளை புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இன்று அறிவிக்க உள்ளது.
வல்லுநர்களின் கணிப்பும் அமைச்சகத்தின் மதிப்பீடும் பொருந்தினால் இந்தியாவின் மோசமான வளர்ச்சி செயல்திறனாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
1996 முதல் ஜி.டி.பி குறித்த விவரங்களை காலாண்டிற்கு ஒரு முறையென இந்தியா பதிவு செய்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்ததால் ஜூன் காலாண்டில் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 45 சதவீத பங்கைக் கொண்ட உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து போன்ற துறைகள் முடங்கியதே இந்த பாதிப்புக்கு கரணம் எனவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.