\
நாட்டின் முதல் திருநங்கை நீதிபதி நியமனம்

நாட்டின் முதல் திருநங்கை நீதிபதி நியமனம்

நாட்டின் முதல் திருநங்கை நீதிபதி நியமனம்
Published on

நாட்டிலேயே முதல் முறையாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாநிலங்களை சேர்ந்த திருநங்கைகள் பலர் எம்.எல்.ஏ., மேயர், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் போன்ற பதவிகளில் இருந்து வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போது மேற்கு வங்காளத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள இஸ்லாம்பூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தின் (லோக் அதாலத்) நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டிலேயே திருநங்கை நீதிபதியாகி இருப்பது இதுதான் முதல் முறையாகும். இவரது பெயர் ஜோயிதா மண்டல் கொல்கத்தாவை சேர்ந்தவர். 2009-ம் ஆண்டு இவர், கொல்கத்தாவில் இருந்து சிலிகுரிக்கு ரெயிலில் பயணம் செய்தார். ஆனால், இடம் தெரியாமல் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூரில் இறங்கி விட்டார். பின்னர் அங்கேயே அவர் நிரந்தரமாக தங்கினார். அங்கு திருநங்கைகளை ஒன்று திரட்டி சங்கம் ஒன்றை உருவாக்கினார். ‘தினாஜ்பூர் புதிய விளக்கு’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த சங்கத்தின் மூலம் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டார். திருநங்கைகளுக்கு பல்வேறு உதவிகளையும் பெற்று கொடுத்தார். அவருடைய சமூக பணிகள் காரணமாக தற்போது நீதிபதி பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் தலைமையில் நடந்த நீதிமன்ற வழக்கு விசாரணை மூலம் வங்கி கடன் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதியாக நியமிக்கப்பட்டது குறித்து ஜோயிதா மண்டல் கூறியதாவது:-

"நான் இந்த பதவிக்கு வந்திருப்பதன் மூலம் திருநங்கைகள் சமூகத்துக்கு இன்னும் நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். திருநங்கைகளின் முன்னேற்ற இன்னும் பல பணிகளை அரசு செய்ய வேண்டும். அவர்களுக்கு அரசு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். திருநங்கைகளை பொருத்தவரை அவர்கள் அதிகம் படிப்பதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, அரசு துறைகளில் உடல் ரீதியாக செய்யப்படும் குரூப்-டி பணிகளை வழங்க வேண்டும். இதேபோல் தனியார் துறைகளிலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரவேண்டும். திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காததால் தான் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ரெயிலில் பிச்சை எடுக்கிறார்கள். 150 ரூபாய், 200 ரூபாய் சம்பளத்துக்கு வேலை கிடைத்தால் கூட அவர்கள் பாலியல் தொழிலை கைவிட்டு இரவில் நிம்மதியாக தூங்குவார்கள்." என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com