உலகளவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் பட்டியல்: முதலிடத்தில் இந்தியா !
இந்தியாவில் தொற்றுப் பரவல் வேகம் மிக அதிகமாகவுள்ளதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. கடந்த ஒருவாரத்தில் உலகளவில் புதிதாக தொற்றுக்கு ஆளாகியவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 லட்சத்து 40ஆயிரம் பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு மட்டுமின்றி கடந்த ஒரு வாரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையிலும் இந்தியாவே முதலிடத்திலுள்ளது. உலகளவிலான பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்காவே முதலிடத்தில் இருந்தாலும் புதிதாகவும், வேகமாகவும் தொற்று பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்திலுள்ளது.
பிரேசிலில் ஒருலட்சத்து 89ஆயிரம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அர்ஜெண்டினாவில் 73ஆயிரத்து 823 பேருக்கும், கொலம்பியாவில் 52ஆயிரத்து 26 பேருக்கும் கடந்த ஒருவாரத்தில் தொற்று உறுதியாகியுள்ளது. ஸ்பெயினில் புதிதாக தொற்றுக்கு 45ஆயிரத்து 475 பேரும், பெருவில் 39ஆயிரத்து 882 பேரும் கொரோனாவால் கடந்த ஒருவாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 37ஆயிரத்து 306 ரஷ்யாவில் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்புகளை மெக்சிகோ சந்தித்து வருகிறது. அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டாலும், அதனை மக்கள் முழுமையாக பின்பற்றாததே இந்தியாவில் தொற்று அதிகரிப்பதற்கு காரணமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.