3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் போர் விமானங்கள்.. மத்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல்.?
இந்தியா 114 ரஃபேல் போர் விமானங்களை, ரூ3.25 லட்சம் கோடிக்கு வாங்க மத்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனம் ரஃபேல் போர் விமானங்களை தயாரித்து வருகிறது. ஏற்கனவே, அந்நிறுவனத்திடம் இருந்து இந்தியா 36 விமானங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறது . மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா கடற்படை பயன்பாட்டுக்காக 26 விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது . இது தொடர்பாக டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
இந்த ஒப்பந்ததின் கீழ், 3.25 லட்சம் கோடி செலவில் 18 விமானங்கள் பறக்கும் நிலையில் வாங்கப்படும் என்றும் மீதமுள்ள 96 விமானங்கள் இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், இந்தத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாத இறுதியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியாவுக்கு வருகை தரும்போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

