இந்த விஷயத்தில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளியது இந்தியா!
இந்தியாவில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மிகவும் பிரபலமாக உள்ள நிலையில், தற்போது விமானப் போக்குவரத்தும் வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. இதில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 3-ஆவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்தில் உலகளவில் 3-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்த இடத்தை இந்தியா பெற்றிருப்பதாகக் கூறுகிறது ஆசிய பசிஃபிக் விமான மையம். உலகில் வேகமாக வளரும் உள்நாட்டு விமானச் சந்தை என்ற பெயரை இந்தியா தொடர்ந்து 22-வது மாதமாகத் தக்க வைத்துக்கொண்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
பொருளாதார ரீதியில் இந்தியர்கள் வலுவடைந்து வருவது இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் சந்தை நிபுணர்கள். விமான போக்குவரத்துக்கு அரசு தந்து வரும் ஊக்கமும் அதன் தொடர்ச்சியாக விமான நிறுவனங்கள் வழங்கி வரும் சலுகைகளும் கூட இந்த அபார வளர்ச்சிக்கு காரணம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறிய நகரங்களுக்கு இடையேயும் விமான போக்குவரத்து, ஒரு மணி நேரத்துக்குட்பட்ட பயணங்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அதிகபட்ச கட்டணம், வரிச் சலுகைகள் என ஏராளமான அறிவிப்புகள் விமானப் போக்குவரத்து கொள்கையில் இடம் பெற்றுள்ளது. இதனால் பல ஆயிரங்களாக இருந்த விமான கட்டணங்கள், தற்போது சில ஆயிரங்களாக குறைந்துவிட்டது.
குறைவான நேரம். குறைவான கட்டணம், சொகுசான பயணம் என கவர்ந்திழுக்கும் விமான நிறுவனங்களால் ரயில்களில் உயர் வகுப்பு பயணங்கள் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தியர்களின் வான்வழி பயண மோகத்தால் வெளிநாட்டு விமான நிறுவனங்களும் இந்திய வான்வெளிகளில் வட்டமிடத் திட்டமிட்டு வருகின்றன.